வெள்ளி கிழமைகளில் நோன்பு வைப்பது தொடர்பான சட்டம் என்ன?


வெள்ளி கிழமைகளில் நோன்பு வைப்பது தொடர்பான சட்டம் என்ன?

வெள்ளி கிழமை நோன்பு வைப்பதில் ஒன்றல்ல பல முறைகள் இருக்கின்றன. 

மதீனாவில் உள்ள உலாமாக்களின் இது தொடர்பான கூற்றை நமது ஷேக் Dr. அரபாத் பின் ஹஸன் அல்-முஹம்மதீ حفظه الله விரிவாக விவரித்துள்ளார்கள். 
ஷேக் 4 சந்தர்ப்பங்களை கூறுகிறார்கள் :

முதல் சந்தர்ப்பம் : 

கடமையான நோன்பை நோற்பது, கஃபாரா (பிராயசித்தமாக உள்ள )நோன்பு , கதா நோன்பு ( ரமழானில் விடுபட்ட நோன்பை பிடிப்பது). இந்த சந்தர்ப்பங்களில் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பது ஆகுமானதாகும் என்று எல்லா அறிஞர்களும் குறிப்பிடுகிறார்கள். 

இரண்டாம் சந்தர்ப்பம்: 

வெள்ளிக்கிழமைகளில் சுன்னத் நோன்பு நோற்பது. உதாரணமாக ஹிஜ்ரி மாதத்தின் 13,14 மற்றும் 15 ம் நாட்களில் நோன்பு அல்லது ஆஷூரா தினத்தில் நோன்பு அல்லது அரபா தினத்தில் நோன்பு ஆகியவை வெள்ளிக்கிழமைகளில் வந்தால், இந்த நோன்புகளை நோற்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த நோன்பு எதுவும் ஒருவர் வெள்ளிக்கிழமை என்ற காரணத்தினால் பிடிப்பது அல்ல. 

மூன்றாம் சந்தர்ப்பம் :

வெள்ளிக்கிழமைக்கு ஒரு நாள் முன்போ அல்லது ஒரு நாள் பின்போ நோன்பு நோற்பது. இவ்வாறு நோன்பு நோற்பது பற்றி ஹதீஸில் இடம் பெற்றுள்ளது. நபி ﷺ ஒரு வெள்ளிக்கிழமை தனது மனைவி ஜுவைரியா رضي الله عنها விடம் சென்றார்கள். அவர்கள் நோன்பு வைத்திருந்ததை அறிந்த உடன் “நேற்று நோன்பு வைத்தீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை” என்று பதிலளித்தார்கள். பின்பு கேட்டார்கள் “நாளை நோன்பு வைக்க போகிறீர்களா?”  அதற்கு அவர் “இல்லை” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர்கள் ﷺ “நோன்பை விட்டு விடு” என்று கூறினார்கள். இது ஏன்?

ஏனென்றால் வெள்ளிக்கிழமை என்பதால் நோன்பு வைக்க ஆசைப்பட்டார்கள். வெள்ளிக்கிழமையுடன் சேர்த்து வியாழனோ அல்லது சனியோ நோன்பு பிடிப்பதற்கான அனுமதியை ஹதீஸில் பார்க்கலாம். அப்படி செய்வதில் தவறில்லை. 

நான்காம் சந்தர்ப்பம் :

வெள்ளிக்கிழமை என்பதால் நோன்பு நோற்பது. இது தடை செய்யப்பட்டதாகும். இதற்கு ஆதாரம் ஜுவைரியா رضي الله عنها அறிவித்ததாகும். 

மேலே உள்ள 4ம் சந்தர்ப்பத்தில் வெள்ளிக்கிழமை என்பதால் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதை தடை செய்தார்கள். இது தடை செய்யப்பட்டது. அரஃபா நோன்பு வெள்ளிக்கிழமை வருமானால் அவர் வெள்ளிக்கிழமை என்பதால் நோன்பு நோற்கவில்லை அரஃபா என்பதினால் நோன்பு நோற்கிறார் எனவே இதில் எந்த தவறும் இல்லை. 

இப்பொழுது இந்த விசயம் தெளிவாகி விட்டது. 

ஒருவர் ஷவ்வாலின் 6 நோன்பை தொடர்ந்து பிடிக்கும் பொழுது வெள்ளிக்கிழமை வருமானால் , வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதில் தவறில்லை. 

அதுபோல், ஒருவர் வெள்ளிக்கிழமையும் பின்பு சனிக்கிழமையும் நோன்பு நோற்பாரானால் அதில் தவறில்லை. 

ஏனென்றால் இது ஹதீஸில் கூறப்பட்ட சட்டத்திற்கு வெளியில் உள்ளது. 

சில அறிஞர்கள் கூறுகிறார்கள் ( ஷேக் மேற்கூறியது போல்). வெள்ளிக்கிழமை என்பதால் நோன்பு நோற்பதற்கு தடை உள்ளது. 
ஆகவே, ஒருவர் வெள்ளிக்கிழமை என்பதற்காக அல்லாமல் நோன்பு நோற்பாரேயானால் சுன்னா நோன்பையும் வெள்ளிக்கிழமை நோற்பதில் தவறில்லை.

தமிழில் அபூ முஹம்மது அபூபக்கர் கோவை

Comments